புதன், 4 மார்ச், 2015

இரண்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி

 இரண்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி

1. கேசவன் தமர் கீழ்மேல் எமரேழ் எழுபிறப்பும்
மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா
ஈசனென் கருமாணிக்கம் என்செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே

2. நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வனெந்தை
சீரணங்கமரர் பிறர் பலரும் தொழுதேத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என்மாதவனே

3. மாதவன் என்றதேகொண்டு என்னையினி இப்பால்பட்டது
யாதவங்களும்  சேர்கொடேனென்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண்குன்றம்
கோதவமிலென் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே

4. கோவிந்தன் குடக்கூத்தன் கோவலென்றென்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக்கொண்டு என்
பாவந்தன்னையும் பாறக்கைத்து எமரேழ் எழுபிறப்பும்
மேவும் தன்மயமாக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே

5. விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைப்பாதம் கைகள்கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம்சீர் சங்குசக்கரம் பரிதி
விட்டிலங்கு முடியம்மான் மதுசூதனன் தனக்கே

6. மதுசூதனையன்றி மற்றிலேனென்று எத்தாலும் கருமமின்றி
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி ஊழிதொறும்
எதிசூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள்செய்ய
விதிசூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே

7. திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண் எம்மான் என்செங்கனிவாய்
உருவில்பொலிந்த வெள்ளைப் பளிங்குநிறத்தனன் என்றென்று உள்ளிப்
பரவிப்  பணிந்து பல்லூழியூழி நின்பாத  பங்கயமே
மருவித்தொழும் மனமேதந்தாய் வல்லைகாண் என்வாமனனே

8. வாமனன் என் மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்றென்று உன்கழல்பாடியே பணிந்து
தூமனத்தனனாய்ப் பிறவித் துழதிநீங்க என்னைத்
தீமனம் கெடுத்தாய் உனக்கென்செய்கேன் என்சிரீதரனே

9. சிரீதரன் செய்யதாமரைக் கண்ணன் என்றென்று இராப்பகல்வாய்
வெரீஇ அலமந்து கண்கள் நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து
மரீஇய தீவினைமாள இன்பம்வளர வைகல்வைகல்
இரீஇ உன்னை என்னுள்வைத்தனை என் இருடீகேசனே

10. இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர்குலம்
முருடுதீர்த்த பிரான் அமரர்பெம்மான் என்றென்று
தெருடியாகில் நெஞ்சேவணங்கு திண்ணம் அறியறிந்து
மருடியேலும் விடேல்கண்டாய் நம்பி பற்பநாபனையே

11. பற்பநாபன் உயர்வற உயரும் பெருந்திறலோன்
எற்பரன் என்னையாக்கிகொண்டு எனக்கே தன்னைத்தந்த
கற்பகம் என்னமுதம் கார்முகில்போலும் வேங்கடநல்
வெற்பன் விசும்போர்பிரான் எந்தை தாமோதரனே

12. தாமோதரனைத் தனிமுதல்வனை ஞாலமுண்டவனை
ஆமோதரமறியே ஒருவர்க்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோதரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே

13. வண்ணமாமணிச் சோதியை அமரர்தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென்குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ்மாலை  ஆயிரத்துள் இவைபன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு அண்ணல்தாள் அணைவிக்குமே

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக