புதன், 4 மார்ச், 2015

இரண்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி

இரண்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி

1. கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில்சூழ் மாலிரும்சோலை
தளர்விலர் ஆகிச் சார்வது சதிரே

2. சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம்கோயில்
மதிதவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது ஏத்தி எழுவது பயனே

3. பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழைவண்ணர் புரிந்துறை கோயில்
மயல்மிகு பொழில்சூழ் மாலிரும் சோலை
அயன்மலை அடைவது அது கருமமே

4. கருமவன் பாசம் கழித்து உழன்றுய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை அதுவே அடைவது திறமே

5. திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அறமுயல் ஆழிப் படையவன் கோயில்
மறுவில் வண்சுனை சூழ் மாலிரும் சோலை
புறமலை  சாறப் போவது கிறியே

6. கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணை  உண்டவன் கோயில்
மறியொடு பிணைசேர் மாலிரும் சோலை
நெறிபட அதுவே நினைவது நலமே

7. நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுனம் இடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதிசேர் மாலிரும் சோலை
வலமுறை  எய்தி மருவுதல் வலமே

8. வலம் செய்து வைகல் வலங்கழியாதே
வலம் செய்யும் ஆயமாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே

9. வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர்பெரும் கோயில்
மழக்களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவது துணிவது சூதே

10. சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில்சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே

11. பொருளென்று இவ்வுலகம் படைத்தவன் புகழ்மேல்
மருளில் வண்குருகூர் வண் சடகோபன்
தெருள்கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக